மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வகையில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 504 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை அவர் அறிவித்தார்.
அசாம் மாநிலத்தின் கோபூர் மற்றும் நுமலிகர் இடையே பிரம்மபுத்ரா நதிக்கு அடியில் சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள நான்கு வழிச் சாலை மற்றும் இரட்டைச் சுரங்கப்பாதை அமைக்கக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
தற்போது 240 கிலோ மீட்டர ஆக உள்ள பயண தூரம், இந்தத் திட்டத்தின் மூலம் 34 கிலோ மீட்டர் ஆகக் குறையும் எனவும் இதனால் 6 மணி நேரப் பயணம் வெறும் 20 நிமிடங்களாக மாறும் எனவும் கூறினார்.
ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வேகத்தை அதிகரிக்கவும் மூன்று முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கியத் தொழில் நகரங்களின் வளர்ச்சிக்காக 1 லட்சம் கோடி ரூபாய் மத்திய நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்.
புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்தவும் பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















