சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரத்து 400 ஏக்கர் நிலத்தை மீட்பதற்காக ஏழாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்த எழுபது பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், அத்திப்பட்டி சூரியூர் பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வந்த ஆயிரத்து 400 ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த 2004ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி தரிசு நிலமாக மாற்றியது.
இந்த நிலத்தை பறிகொடுத்த 600 விவசாய குடும்பங்கள், அந்த நிலத்தை மீட்பதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலத்தில் புகுந்து மரங்களை வெட்டி விவசாயம் செய்ய முயன்றனர்.
அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியாக அந்த விவசாயிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்ததால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
















