மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்திருப்பது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள சூழலில், திமுக-காங்கிரஸ் இடையே ஆட்சியில் பங்கு தொடர்பாக முற்றும் மோதல் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.
இத்தகைய சூழலில், மகளிர் உரிமைத் தொகையில் ஐந்தாயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனி யாரும் ஆட்சியில் பங்கு என பேச மாட்டார்கள் என்று திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்தலுக்கு முன்னதாக இதுபோன்ற திட்டங்களை அறிவித்த ஒன்பது மாநில தேர்தல்களில் நான்கு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
















