வங்கதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் முன்னாள் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ், மீண்டும் ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்கதேசத்தில் 18 மாதங்களுக்கும் மேலாக முகமது யூனுஸ் தலைமையில் செயல்பட்டுவந்து இடைக்கால அரசு முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற வங்கதேச தேசியவாத கட்சி ஆட்சி அமைத்துள்ளது. புதிய பிரதமராக அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார்.
ஜூலை சாசனத்தின்படி புதிய உறுப்பினர்கள் பதவியேற்க வேண்டும் என்ற முகமது யூனுஸின் கோரிக்கையை நிராகரித்தார் பிரதமர் தாரிக் ரஹ்மான். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் பதவியில் இருந்து வெளியேறும் முகமது யூனுஸ் தனது கடைசி உரையில், சுதந்திர நலன்களைப் பாதுகாப்பதில் நம்பிக்கையுடனும், சுறுசுறுப்பாகவும், பொறுப்புடனும் உள்ள வங்கதேசம் இனி அடிபணிந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட நாடாகவோ, பிற நாடுகளின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளைச் சார்ந்து இருக்கும் நாடாகவோ இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவுடனான தனது உறவை வங்கதேசம் மேம்படுத்த வேண்டும் என்றும், சீனாவுக்காக ஒப்புக்கொண்டபடி டீஸ்டா நதி மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் நீல்பமாரியில் 1,000 படுக்கைகள் கொண்ட சர்வதேச மருத்துவமனை திட்டம் ஆகியவற்றை விரைவாக நிறைவேற்றவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சீனாவின் டீஸ்டா நதி மறுசீரமைப்புத் திட்டம் என்பது இந்தியாவின் சிக்கன்ஸ் நெக் பகுதிக்கு அருகில் உள்ளது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் சென்ற முகமது யூனுஸ்,சீன அதிபரை சந்தித்து, ஒன்பது ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
“ஏழு சகோதரிகள்” என்று அழைக்கப்படும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் சூழப்பட்டவை என்றும், மேலும் வங்கதேசமே அந்தப் பகுதிகளுக்கு கடல் பாதுகாவலன் என்றும் கூறிய யூனுஸ், இதை சீனப் பொருளாதாரத்துக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்பாக மாற்றலாம் என்றும் பரிந்துரைத்தார். இப்போது மீண்டும் தனது கடைசி உரையிலும் யூனுஸ் அதையே வலியுறுத்தியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கன்வால் சிபல், பூட்டான் மற்றும் நேபாளத்தை இறையாண்மை கொண்ட நாடுகள் என்று குறிப்பிட்ட யூனுஸ், இந்தியாவைப் பற்றி குறிப்பிடாமல் ஏழு சகோதரிகளைப் பற்றி குறிப்பிடுவது, அவரது “ஆபத்தான மனநிலையை” வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார்.
அதேபோல் வங்கதேசத்தை நிலைநிறுத்தத் தவறிய முகமது யூனுஸ், இந்தியாவை “வெளிப்புற வில்லனாக” “உருவாக்க” முயற்சித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் இடைக்கால அரசின் ஆலோசகரான முகமது யூனுஸ், வங்கதேசத்தின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவுக்கு எதிரானதாக மாற்றியமைத்தார்.
சீனாவுடனும், பாகிஸ்தான் உடனும் மீண்டும் உறவை வளர்த்துக் கொண்ட யூனுஸ் அரசு, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை அனுமதித்தது. முகமது யூனுஸ் காலத்தில்,இந்திய வங்கதேச உறவுகள் மேலும் பாதிப்படைந்தது. அந்நாட்டில் இந்துக்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்திய தூதரகங்களில் முற்றுகை போராட்டங்கள் நடத்தப் பட்டன.
யூனுஸின் கீழ் வங்கதேசம் வெளிநாட்டு உறவுகளில் சிறிதளவுக் கூட லாபத்தையோ நன்மையோ ஈட்டவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பதவி விலகும் போதும் இந்தியா மீதான வன்மத்தைக் கக்கியுள்ள யூனுஸுக்கு, சிக்கன் நெக் எனப்படும் கோழியின் கழுத்தை யானையின் தும்பிக்கையாக பிரதமர் மோடியின் தலைமயிலான மத்திய அரசு மாற்றி வருகிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
















