இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் என்றும், எனவே இந்துக்கள் 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மோகன் பாகவத், இந்து மக்கள் தொகை சரிவு மற்றும் சமூக ஒற்றுமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.
இந்து சமுதாயம் தனது எண்ணிக்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்து குடும்பங்கள் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மக்கள் தொகை குறைந்தால் ஒரு கலாச்சாரம் அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக தெரிவித்த அவர், நாட்டின் மக்கள் தொகை சமநிலையில் ஏற்படும் மாற்றம் கவலைக்குரியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்துக்கள் எண்ணிக்கையில் குறையும்போது அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் சவாலாக அமையும் என்று எச்சரித்த அவர், இந்து சமுதாயத்திற்குள் இருக்கும் சாதி ரீதியான பிளவுகள் களையப்பட வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினார்.
“ஒரே கிணறு, ஒரே கோயில், ஒரே சுடுகாடு” என்ற நிலையை நோக்கி இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நவீன காலத்தில் குடும்ப உறவு சிதைந்து வருவதாகக் குறிப்பிட்ட மோகன் பகவத்,குழந்தைகளுக்கு தர்மம் மற்றும் தேசபக்தி குறித்த கல்வியை வீடுகளிலேயே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
















