புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்குவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவுடனான தொழில்நுட்ப உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டெல்லியில் நடைபெற்றுவரும் AI உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மும்பை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருதலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பாதுகாப்பு, வர்த்தகம், சுகாதாரம், தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்த ஆண்டு இந்தியா – பிரான்ஸ் புதுமை கண்டுபிடிப்பு ஆண்டாக கொண்டாடப்படுவதாக கூறிய பிரதமர் மோடி, இந்திய பிரான்ஸ் இடையேயான நட்புறவு கடலை விடவும் ஆழமானதாகவும் மலையைவிட உயரமானதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா-பிரெஞ்சு ஒத்துழைப்பின் முக்கிய தூண்களாக இந்திய-பிரெஞ்சு சுகாதாரத்துறையில் செயற்கை நுண்ணறிவு மையம், டிஜிட்டல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துக்கான இந்திய-பிரெஞ்சு மையம் மற்றும் விமானவியல் துறையில் திறன் மேம்பாட்டுக்கான தேசிய மையம் ஆகியவற்றைத் தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேலும்,தொழில், பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி, விண்வெளி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தாகவும் இருநாடுகளும் இணைந்து ஸ்டார்ட்அப்கள் மற்றும் MSME-களுக்கு இடையே வலுவான நெட்வொர்க்குகளை எளிதான மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர் பரிமாற்றங்கள் மற்றும் புதிய கூட்டு கண்டுபிடிப்பு மையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தனித்துவமான இருதரப்பு உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் இந்திய பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, இந்திய – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் உயர்தர தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் என இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என கூறிய இம்மானுவேல் மேக்ரான், நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா இருப்பதால் தான் தங்கள் நாட்டு தொழில் நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த செவ்வாய் கிழமை மும்பையில் நடந்த இந்தியா-பிரான்ஸ் புதுமை மன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர், புதிய கண்டுபிடிப்புகளில் தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்குவதாக கூறியுள்ளார்.
ஆல்பபெட், மைக்ரோ சாஃப்ட், ஐபிஎம், (Adobe) அடோப், (Palo Alto Network) பாலோ ஆல்டோ நெட்வொர்க் என உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்தியரே இருப்பதாக தெரிவித்த பிரான்ஸ் அதிபர், உலகளாவிய புதிய கண்டுபிடிப்புகளில் பங்கேற்பதோடு மட்டும் இல்லாமல் உலக நாடுகளையே இந்தியா வழிநடத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய தொழில்களை வடிவமைப்பதிலும், உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வரும் இந்தியாவை பாராட்டிய பிரான்ஸ் அதிபர், இந்தியாவுடனான தொழில்நுட்ப உறவை மேம்படுத்த பிரான்ஸ் ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் உலகின் மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனுடன் ஏற்படுத்திய இந்தியா, இப்போது பிரான்சுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இது புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பமாகும்.
பிரதமர் மோடி கூறியது போல், இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை உலகளாவிய நிலைத்தன்மைக்கு உந்துசக்தியாகும் என்பது 100 சதவீதம் உண்மையாகும்.
















