திருப்பூர் அருகே முருகன் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் கந்த சஷ்டி கவசம் பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் 7ம் தேதி ஈட்டிவீரம்பாளையம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி குமரன் குன்று கோயிலை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதனைக் கண்டித்து பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவசம் பாடி நூதன போராட்டம் நடைபெற்றது.
இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மீண்டும் அதே பகுதியில் கோயிலை அமைக்க வலியுறுத்தி கந்த சஷ்டி கவசம் மற்றும் முருகன் பாடல்களை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பேட்டியளித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், சட்டப்பேரவை தேர்தலில் இது எதிரொலிக்கும் எனவும் கூறினார். முருகன் கோயிலை மீண்டும் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்திய அவர், வரும் 23ஆம் தேதி திருப்பரங்குன்றம் மற்றும் தமிழக முழுவதும் கந்த சஷ்டி கவசனம் பாடி நூதன முறையில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
















