வாளையார் சோதனைச்சாவடி அருகே, நகை தொழிலாளியை கடத்தி 41 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளை கும்பல் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்
கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், 200 கிராம் தங்கக் கட்டிகளை விற்றுவிட்டு, அதற்கு கிடைத்த 41 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
வாளையார் சோதனைச்சாவடியைக் கடந்தபோது, அவரை காரில் 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்தது.
பின்னர் லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளிய அந்தக் கும்பல், அவரை பலவந்தமாகக் காரில் கடத்தியதுடன், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் கையோடு எடுத்துச் சென்றது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 41 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை அந்தக் கும்பல் பறித்துக்கொண்டதுடன், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே லட்சுமணனை இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
















