உலகத் தலைவர்களும், பல முன்னணி நிறுவனத் தலைவர்களும் பங்கேற்றுள்ள AI சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஐந்து நாள் AI சர்வதேச மாநாடு, கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதில் பல உலக நாடுகளின் தலைவர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்று, இந்தியாவின் பெருமைகள் குறித்து பேசி நமது நாட்டை பெருமைப்படுத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக சிறப்பாக நடந்து வந்த இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனர்.
மாநாடு நடைபெறும் AI மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து மேலாடைகளை கழற்றி அரைநிர்வாணமாக நின்று முழக்கமிட்ட காங்கிரஸ் கட்சியினருடன் அங்கிருந்த மக்கள் சண்டை போட்டு விரட்டியடித்தனர். பின்னர் வெளியே சென்ற அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அநாகரிக செயல், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கடும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல், காங்கிரசின் இந்த சதிக்கு மூளையாக செயல்பட்டது ராகுல்காந்திதான் என பாஜக விமர்சித்து வருகிறது.
அதேவேளையில், போராட்டத்தில் பங்கெடுத்த ஒருவர், ராகுல்காந்தியுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி, அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. எனவே, இது குறித்து விமர்சித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, காங்கிரஸ் இந்த போராட்டத்தை திட்டமிட்டதே ராகுல்காந்தியின் வீட்டில்தான் என கூறியுள்ளார்.
அதேபோல், சிவராஜ் சிங் செளகான் இது தேசத்துரோகம் என்றும், பியூஷ் கோயல் இது ஆணவம் மற்றும் விரக்தியின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஏஐ மாநாடு ஒன்றும் அரசியல் மேடையல்ல என்று காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
















