டெல்லியில் நடந்த AI IMPACT உச்சிமாநாட்டில் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இந்தியா உருவாக்கியுள்ள சர்வம் AI தம்மை ஆச்சரியப்பட வைத்ததாக கூறியுள்ளார். மேலும், கூகுள், ஜெமினி மற்றும் ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி உள்ளிட்ட புகழ்பெற்ற AI- மாடல்களை விட சர்வம் AI மாடல் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்த இந்த ஆண்டுக்கான AI AI IMPACT உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுந்தர் பிச்சை, ஒவ்வொரு முறை இந்தியாவுக்கு வரும்போது இந்தியாவில் உலகின் சிறந்த டெவலப்பர்களைப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் தொழில்முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பு நாளுக்கு நாள் செழித்து வளர்ந்து வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக இந்திய மொழிகள் மற்றும் சூழல்களுக்கு ஏற்ப உள்ளூர் AI மாடல்களை உருவாக்குவதில் சர்வம் AI- சர்வதேச அளவில் முதன்மையானதாக மிகச் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை மட்டுமில்லை AI உச்சி மாநாட்டுக்கு வந்த அனைத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் AI துறை சார்ந்த வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சர்வம் AI தொழில்நுட்பம்.
இதே உச்சி மாநாட்டில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட AI-யை இந்தியர்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதைக் காட்டுவதாக அறிவித்து, சர்வம் AI-யை, சர்வம் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆன பிரதியுஷ் குமார் அறிமுகப் படுத்தினார்.
குரல் கட்டளைகள் மூலம் பயன்படுத்தக்கூடிய மற்றும் 22 இந்திய மொழிகள் மூலம் அணுகக்கூடிய சர்வம் 105B மற்றும் சர்வம் 30B என்ற இரண்டு சர்வம் AI மாடல்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல் மிகப்பெரிய AI மாடல்களை உருவாக்குவதை விட AI-யில் இறையாண்மை மிகவும் முக்கியமானது என்று சர்வம் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் விவேக் ராகவன் கூறினார்.
105 பில்லியன் அளவுரு மாதிரிகளால் உருவாக்கப்பட்ட இந்த சர்வம் மாடல்கள் பகுத்தறிவு பணிகளில் DeepSeek R-யை விட சிறப்பாகவும் செயல்திறனில் Gemini Flash போன்ற உலகளாவிய AI மாடல்களை விடவும் உயர்தரத்துடனும் செயல்படுகிறது.
OCR துல்லியம், இந்திய மொழிகள் & உச்சரிப்புகள், பேச்சுக்கு-உரை & உரைக்கு-பேச்சு எனும் குரல் அடிப்படையிலான AI ஆகிய 3 முக்கிய பகுதிகளில் ChatGPT & Google Gemini யை விட சர்வம் AI சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது
மேலும் இந்தியாவின் முதல் AI-யால் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகளான சர்வம் கேஸையும் வெளியிட்டுள்ளனர். இந்த AI உச்சிமாநாட்டில் சர்வம் கண்ணாடிகளை முதலில் அணிந்து டெமோ செய்த முதல் நபர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இது நேரடியாக ஆடியோவைக் கேட்டு புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. இந்திய உச்சரிப்புகள் சரியாக புரிந்து கொண்டு, பின்னணி இரைச்சல் மற்றும் குறுக்கீடுகள் ஏதுமில்லாமல் முழுமையான வகையில் பதிலை தருகிறது.
பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் – இந்தியாவின் OpenAI என்றுதான் கூறப்படுகிறது.
2010ம் ஆண்டில், வடிவமைப்பு தொழில்நுட்ப வேலையை விட்டுவிட்டு,130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக்ஸ் ஆதாரை உருவாக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் பணியாற்றிய விவேக் ராகவன், தனது நண்பர் பிரதியுஷ் குமார் உடன் சேர்ந்து 2023ம் ஆண்டு சர்வத்தைத் தொடங்கினார்
தொடர்ந்து OPEN SOURCE வகையில் 120 பில்லியன் அளவுரு பெரிய மொழி மாதிரியை உருவாக்குவதற்கான அரசாங்க ஆணையை இந்த நிறுவனம் பெற்றது.
இந்திய மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய, கணிதத்தில் வலிமையான ஒரு LLM-ஐ உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
100B+ மாதிரியை உருவாக்குவது வெறும் குறியீடு மட்டுமல்ல; ஒரு தளவாடப் போர் என்று தான் சொல்லவேண்டும்.
உலகத்தில் மிகப்பெரிய சாதனை என்று எல்லோரும் சொல்வதுண்டு. ஆனால் AI உச்சி மாநாட்டு மேடையில் “உலகில் மிகப்பெரிய சாதனை” உண்மையில் எப்படி இருக்கும் என்பதை சர்வம் AI உலகுக்குக் காட்டியுள்ளது.
















