மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் சைபர் குற்றங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், செல்போன் வாயிலாக அப்பாவி மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி நபர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.
இந்த டிஜிட்டல் கைது மோசடியில் மட்டும் கடந்த 2022ல் 91 கோடி ரூபாயை மக்கள் இழந்தனர். இதுதொடர்பாக 39 ஆயிரத்து 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது 2023ல் 272 சதவீதம் உயர்ந்து 339 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2024ல் நிலைமை மோசமடைந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் வழக்குகளும், ஆயிரத்து 918 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ்., செல்போன் காலர் ட்யூன், விளம்பரங்கள் மற்றும் பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஆகியவை மூலம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் பலனாக கடந்த 2025ல் சைபர் குற்ற வழக்குகள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 264 ஆகவும், மக்கள் இழந்த பணம் 644 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது.
















