வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அவரது அரசு தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்தது. இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், பிஎன்பி கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன், முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை பதவி நீக்கம் செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டினார். முகமது யூனுஸ் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை இரண்டு முறை ரத்து செய்ததாக கூறிய முகமது ஷஹாபுதீன், யூனுஸின் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானது எனவும் தெரிவித்தார். அதேசமயம் தற்போதைய வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானை பாராட்டிய அவர், அவர் மிகவும் நேர்மையான நபர் என தெரிவித்துள்ளார்.
















