சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஆர்.டி.ஐ மூலம் தகவல் கோரியவரின் பெயர், விவரங்களை, முறைகேட்டில் ஈடுபட்டவரிடமே தெரிவித்த அரசு அதிகாரியின் உதவியாளர் ஆடியோ வெளியாகி அதிரச் செய்துள்ளது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளரான தென்னரசு என்பவர், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் வீடு கட்டும் திட்டத்துக்காக சமர்ப்பித்த ஆவணங்களை வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மனு அளித்திருந்தார்.
அதனை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி, ஆவணங்களை வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மாறாக ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரியின் பெண் உதவியாளர், முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரையே தொடர்பு கொண்டு தென்னரசுவின் விவரங்களை கோரியுள்ளார்.
மேலும், தனது தகவல்களை யாரிடமும் தரக்கூடாது என கோரி கடிதம் அளிக்கும்படியும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரை பெண் உதவியாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆர்.டி.ஐ மூலம் மனு அளித்தவரின் பெயர் விவரங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
















