திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், தலை காயத்திற்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அந்த மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள், ஆறு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுநர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்திலேயே ஒருவரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அதனால், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் வரதராஜனின் தலைக் காயத்திற்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில், பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
















