ஆந்திர போலீசாரால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் சமூக குடும்பத்தினர் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடி விசாரணையை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு திருட்டு வழக்கு தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவன் உட்பட 10க்கும் மேற்பட்டோரை, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, தங்களை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும், பெண் கைதிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரடியாகச் சென்று, பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.
















