இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தெடுக்கப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகள் 15 பேர், தற்போது ஜப்பானில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியாவின் மிக முக்கிய உட்கட்டமைப்பு திட்டமான மும்பை-அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டத்திற்கு ஜப்பானின் கடனுதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், நிதியுடன் சேர்த்து ஷின்கான்சென் எனப்படும் புல்லட் ரயிலின் தொழில் நுட்பத்தையும் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்திருந்தது.
இதற்கான பணிகள் 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புல்லட் ரயில் சேவை அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என அண்மையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து புல்லட் ரயிலுக்கான கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புல்லட் ரயிலை இயக்குவது குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இந்திய ரயில்வே அதிகாரிகள் தற்போது ஜப்பானில் தங்கியிருந்து புல்லட் ரயில்கள் என அழைக்கப்படும் ஷின்கான்சென் ரயில்களை இயக்குவதற்கான நுணுக்கங்களைக் கற்று வருகின்றனர்.
பயிற்சியின்போது இந்திய லோகோ பைலட்கள் ஜப்பானிய முறைப்படி சிக்னல்களைச் சரிபார்த்து ரயிலை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
















