பீகாரில் திருமண நிகழ்வில் மணப்பெண்ணை அவரது காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரின் பக்சர் மாவட்டத்தின் சௌசா பகுதியில் திருமண நிகழ்வில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய்மால் சடங்கு நடைபெற்றது. மணமக்களும் உறவினர்களும் மேடையில் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மணமகள் ஆர்த்தி குமாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் ஆர்த்தி குமாரியை ஒருதலையாக காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நடப்பதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் இந்தத் துணிகர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
துப்பாக்கிச்சூட்டில் மணமகள் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை சுட்டுவிட்டு தப்பியோடியது தீன்பந்து என்ற நபர் என, உறவினர்களிடம் மணமகள் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் உடனடியாக மணமகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி தப்பியோடிய சந்தேக நபரைக், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
















