புது டெல்லி மற்றும் மீரட்டை இணைக்கும் நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி இரண்டு ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
நமோ பாரத் என்பது இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பான RRTS ஆகும். RRTS என்பது NCR-எனப்படும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் ஒரு அரை-அதிவேக பிராந்திய ரயில் அமைப்பாகும். பயண நேரம் மற்றும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக நகர்ப்புற போக்குவரத்தில் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பிராந்திய போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது.
நமோ பாரத் என்பது சாஹிபாபாத், காசியாபாத், மோடிநகர் மற்றும் மீரட் போன்ற முக்கிய நகர்ப்புற மையங்களை டெல்லியுடன் வேகமான வேகத்தில் இணைக்கும் இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பாகும்.
புது டெல்லியில் உள்ள சராய் காலே கானை வடக்கு மீரட்டில் உள்ள மோடிபுரத்துடன் இணைக்கும் 82 கிலோமீட்டர் நீளமான இந்த வழித் தடம், தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தால் கட்டப்பட்டுள்ளது.
RRTS ரயில்கள் நீண்ட தூரம் மற்றும் அதிக வேகத்திற்காக கட்டமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் குறுகிய, அடிக்கடி நகர்ப்புற நிறுத்தங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன
முதல்முறையாக RRTS ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் ஒரே உள்கட்டமைப்பை ஒரே தடத்தைப் பயன்படுத்துகின்றன. ஆனால் ரோலிங் ஸ்டாக் எனப் படும் பெட்டிகள் வேறுபட்டவை. இப்படி RRTS மற்றும் மெட்ரோ ஒரே பாதைகளைப் பகிர்ந்து கொள்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
RRTS மற்றும் மெட்ரோ ஆகிய இரண்டு அமைப்புகளையும் பாதுகாப்பாகக் கையாள இந்த நடைபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீரட்டில் இருந்து பயணிகள், மெட்ரோவைப் பயன்படுத்தி நகரத்துக்குள் பயணிக்க முடியும். மேலும், உடனடியாக நமோ பாரத் ரயில்களில் ஏறி புது டெல்லிக்கும் பயணிக்கலாம்.
வழக்கமான மெட்ரோவை விட அதிவேகமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் நமோ பாரத் ரயில், 82 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 55 நிமிடங்களில் கடந்து பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது. இதுவே சாலை வழியாக புது டெல்லியில் இருந்து மீரட் செல்வதற்கு சுமார் 3 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
70 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல்மட்ட பாலத்திலும் 12 கிலோமீட்டர் தூரத்துக்குச் சுரங்கப்பாதையிலும் செல்லும் இந்த நமோ பாரத் ரயில், மொத்தம் 16 ரயில் நிலையங்கள் கொண்ட நீண்ட வழித்தடத்தில் செல்கிறது.
அதேபோல் தெற்கு மீரட் முதல் மோடிபுரம் வரை 13 நிலையங்களுடன் சுமார் 23 கிலோமீட்டர் தூரத்தையும் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் முழு நகரத்தையும் இணைக்கும் மீரட் மெட்ரோவில் பயண நேரம் வெறும் 30 நிமிடங்களே.
அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் நகர்ப்புற விரிவாக்கத்தைப் பொறுத்து, மேலும் புதிய பாதைகள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லியின் சராய் காலே கானில் இருந்து இரண்டு புதிய விரைவு ரயில் வழித்தடங்களுக்கான திட்டதுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சராய் காலே கானில் இருந்து ஹரியானாவின் கர்னல் வரை சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தை சுமார் ஒன்றரை மணி நேரத்தில் கடக்க கூடிய ஒரு நமோ பாரத் வழித்தடமும், சராய் காலே கானை ஹரியானாவின் பாபர்பூர் மற்றும் ராஜஸ்தானின் நீம்ரானாவுடன் இணைக்கும் மற்றொரு வழித் தடமும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















