மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிரிட்டன் அரசுக்கு, 109 ஆண்டுகளுக்கு முன் 35 ஆயிரம் ரூபாய் கடன் தந்த நிலையில், தற்போது, 12 கோடி ரூபாயாக அதை திருப்பிக் கேட்க அவரின் குடும்பத்தினர் முடிவு செய்து உள்ளனர்.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளை, 100 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின், பிரிட்டிஷார் நாட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே, பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செ ய்த போது, 1917ல், மத்திய பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜூம்மாலால் ருதியா என்பவரிடம் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். பிரிட்டன் அரசுக்கு கடன் கொடுத்த விவகாரம் ருதியாவின் மகன் உள்ளிட்டோருக்கு தெரிந்திருந்தும், அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த விஷயத்தில் அவர்கள் அக்கறை காட்டவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜும்மாலால் ருதியாவின் பேரன் விவேக், தன் தந்தை தொடர்பான உயில்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில், கடன் கொடுத்ததற்கான அசல் பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் கிடைத்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன், 35 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்பதால் தற்போது, வட்டியுடன் சேர்த்தால், இதன் மதிப்பு 12 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பணத்தை பிரிட்டன் அரசு இதுவரை திரும்ப தராததால், கடனை திருப்பிக் கேட்க விவேக் மற்றும் அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
















