இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் , ஜியோ மற்றும் ஒன்வெப் ஆகிய 3 நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தில் செயற்கைக்கோள் இணையம் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே ஸ்டார்லிங்க், ஜியோ மற்றும் ஒன்வெப் ஆகிய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியுள்ளதாகவும், மற்ற தொழில்நுட்பங்களால் அடைய முடியாத இடங்களுக்கும் இணையத்தைக் கொண்டு செல்வதே இதன் நோக்கம் எனவும் கூறினார்.
இந்த சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரம் விலை குறித்து ‘ட்ராய்’ பரிந்துரைகளை வழங்கி வருவதாகவும், விரைவில் இறுதி விலை நிர்ணயிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 5G சேவையில் 40 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ள இந்தியா, அடுத்ததாக 6G தரநிலைகளை நிர்ணயிப்பதில் உலகிற்கே முன்னோடியாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார்.
















