“அரசு வேலை கிடைத்துவிட்டது” என்ற கர்வத்துடன், சீருடையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பயிற்சி காவலர்களுக்கு மத்தியப்பிரதேச காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் 6 காவலர்கள், சமீபத்தில் ஒரு வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவில், காவலர்கள் அனைவரும் சீருடை அணிந்து கொண்டு, பின்னணியில் “அரசு வேலை கிடைத்துவிட்டது” என்ற வசனத்துடன் பாலிவுட் பாடலுக்கு கெத்தாக போஸ் கொடுத்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அரசுப் பணியின் கண்ணியத்தை இவர்கள் கேலிக்குரியதாக மாற்றிவிட்டதாக பலரும் விமர்சித்தனர்.
இதனையடுத்து, சீருடை அணிந்திருக்கும்போது இத்தகைய வீடியோக்களைப் பதிவிடுவது ஒழுக்க விதிகளை மீறும் செயல் என தெரிவித்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட 6 பயிற்சி காவலர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
















