சேலம் குமரகிரி ஏரியில் படகு பாதிவழியில் நின்றதால் அச்சமடைந்த பயணிகள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், படகு சவாரியை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.
சில தன்னார்வ அமைப்புகள் ஏரியை பராமரித்து வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் அத்துமீறி, வருவாய் நோக்கில் படகு சவாரியை தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குமரகிரி ஏரியில் படகு சவாரி நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கைக்குழந்தை மற்றும் சிறு குழந்தைகளுடன், 10க்கும் மேற்பட்டோர் படகு சவாரி செய்தனர். அப்போது, படகு திடீரென பழுதாகி நடுஏரியில் நின்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
அங்கு அவசர காலத்தில் அழைத்துச் செல்லும் படகும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தீவிர முயற்சிக்குப்பின் படகு கரைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொறுப்பாளர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் உயிருடன் விளையாடும் இத்தகைய படகு சவாரி தேவையா? என்றும் கேள்வி எழுப்பினர்.மேலும், சம்பந்தப்பட்ட டெண்டரை மறுஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் கொந்தளித்தனர்.
















