அமெரிக்காவின் SS ஆபிரகாம் லிங்கன் மற்றும் USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற இரண்டு உலகின் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தகர்க்கக் கூடிய ஆயுதம், தங்களிடம் உள்ளதாக ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி எச்சரித்திருந்தார். அமெரிக்காவை விட மிகக் குறைந்த ஆயுத பலம், படை பலம் உள்ள ஈரானின் சவாலுக்குப் பின்னணி என்ன? உண்மையில் ஈரானால் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க முடியுமா? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடனான போரில் ஈரான், புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. எந்த ஏவுகணைகளையும் இடைமறித்து அழிக்கும் இஸ்ரேலின் IRON DOME வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி இஸ்ரேலில் குறித்த இலக்குகளைத் துல்லியமாக ஈரானின் புதிய ஏவுகணைகள் தாக்கி அழித்து சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றன.
Fattah-1 (ஃபட்டா-1) மற்றும் Fattah-2 (ஃபட்டா-2) என்ற ஈரானின் ஏவுகணைகளே அமெரிக்கப் போர்க் கப்பல்களைத் தகர்க்க வல்லது என்று கூறப்படுகிறது.
அல்லாவை அழைக்கும் 99 பெயர்களில் ஒன்று தான் ‘ஃபட்டா’ (Fattah),. ‘ஃபட்டா’ (Fattah) என்றால் நீதிபதி என்று பொருள் ஆகும்.
இஸ்ரேலின் IRON DOME மற்றும் ARROW போன்ற மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறிச் சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளான Fattah வை ’இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்’ என்றே கூறப்படுகிறது.
ஹைப்பர்சோனிக் கிளைடு வாகனமான Fattah-1 ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டதாகும். 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை புவியீர்ப்பு உந்துசக்தியைப் பயன்படுத்தி பாய்கிறது. எனவே அனைத்து திசைகளிலும் தன் போக்கை மாற்றக்கூடிய திறன் கொண்டுள்ளது.
200 கிலோகிராம் வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஒரு நடுத்தர தூர ஏவுகணையான Fattah-1 மணிக்கு 17,900 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.
மேம்பட்ட Fattah-2 (ஃபட்டா-2) ஏவுகணை 1,500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறனும் எந்த வான் பாதுகாப்பு அமைப்புகளாலும் கண்டறிய முடியாத சூழ்ச்சித் திறனும் கொண்டதாக உள்ளது.
இவை மட்டுமல்லாமல் 1,000 கிலோமீட்டர் வரம்பு கொண்ட நீண்ட தூர, துல்லியமான தாக்குதல் திறன் கொண்ட அபு மஹ்தி, 350 கிலோமீட்டர் வரம்பு கொண்ட சீன ‘பட்டுப்புழு’ வடிவமைப்பில் உள்ள ராத், 300 கிலோமீட்டர் வரம்பு கொண்ட கடல்-சறுக்கும் திறனுடன் கூடிய காதிர், 120 முதல் 200 கிலோமீட்டர் வரம்பு கொண்ட மேம்படுத்தப்பட்ட சீன C-802 ரக ஏவுகணைகளான காதர் மற்றும் நூர், 35 கிலோமீட்டர் வரம்பு கொண்ட குறுகிய தூர, உயர்-இயக்கக் கடலோரப் பாதுகாப்புக்கான நாசர்-1 என ஈரானிடம் 1,000 முதல் 1,200 வரை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் (ASCM) இருக்கின்றன என்று கூறப்படுகிறது.
எனினும், ஈரானால் உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் பல அடுக்கு அதிநவீன பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ள விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அளிப்பது முடியாத காரியம் என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே செங்கடல் வணிகப் பாதையைப் பாதுகாக்க அமெரிக்கா தலைமையிலான ‘ஆபரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன்’ நடவடிக்கையின் போது, ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதிகளால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனைத்தையும் அமெரிக்கா நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.
அமெரிக்காவின் போர்க்கப்பல்களை அழிக்கும் வல்லமை ஈரானுக்கு இல்லை என்றாலும், ஏவுகணைகள், டார்பிடோக்கள் மற்றும் ‘ஷாஹித்'(Shahid), ‘அபாபில்'( Ababil) போன்ற தற்கொலை ட்ரோன்களின் ஒருங்கிணைந்த திரள் கூட்டத் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது என்பதே அமெரிக்க கடற்படைக்கு சவாலாக உள்ளது.
















