ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலுக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் குறைக்கப்படும் என்ற அச்சத்தால் எண்ணெய் வர்த்தகத்தில் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் நடத்திய தாக்குதல்களால் ஏற்படும் நிதி வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சியாக, ஐக்கிய அரபு அமீரகம் தனது பங்குச் சந்தைகளை இரண்டு நாட்களுக்கு மூடியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் துபாய் நிதிச் சந்தை ஆகியவற்றின் வர்த்தகம், இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
















