அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் குறி வைத்து கொல்லப்பட்டது ஏன்? அவரது மரணத்தை ஈரான் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் சனிக்கிழமை காலை தாக்குதலை தொடங்கின. அடுத்த சில மணிநேரங்களிலேயே கமேனி கொல்லப்பட்டு விட்டார். இந்த துல்லியமான தாக்குதல் பலருக்கு ஆச்சரியத்தையும், சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் நகரில் 1939ம் ஆண்டு பிறந்தவர்தான் அயதுல்லா அலி கமேனி. அவரது தந்தையான சையத் ஜாவத், இஸ்லாமிய மதகுருவாக திகழ்ந்தார். மஷாத் நகரில் தொடங்கப்பட்ட முதல் இஸ்லாமியப் பள்ளியில் தனது ஆரம்ப கல்வியை முடித்த கமேனி, உயர்கல்வி எதையும் தொடரவில்லை. அதற்கு பதிலாக, இறையியல் பள்ளிகளில் சேர்ந்து மத கல்வியை கற்றார்.
கமேனி சிறுவனாக இருந்தபோது, ஈரானின் மன்னராக முகமது ரெசா ஷா பஹ்லவி என்பவர் இருந்து வந்தார். அவர் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கைப்பாவையாக இருப்பதாகவும், ஈரானில் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, அவரது ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினர். இத்தகைய போராட்டங்களில் அயதுல்லா அலி கமேனியும் கலந்துகொண்டார். இதனால், அவர் 6 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள இரான்ஷாஹர் நகரத்திற்கும் அவர் நாடு கடத்தப்பட்டார்.
இருந்தபோதும், மன்னராட்சிக்கு எதிரான தனது போராட்டங்களை அவர் கைவிடவில்லை. மஷ்ஹாத், கோம் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள மசூதிகளில் மாணவர்களை சந்தித்து, ஷா மன்னருக்கு எதிரான கருத்துகளை எடுத்து கூறியபடி இருந்தார்.
இந்த சூழலில்தான், 1979ம் ஆண்டு ஈரான் மன்னருக்கு எதிரான போராட்டங்கள் உச்சநிலையை எட்டின. மக்களின் போராட்டங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, மன்னரான முகமது ரெசா ஷா பஹ்லவி நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.

இதனை தொடர்ந்து மன்னராட்சியில் இருந்து விடுபட்டு, இஸ்லாமிய குடியராசாக மாறியது ஈரான். புரட்சிக்கு பின் ஈரானில் புரட்சிகர கவுன்சில் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் உறுப்பினர் அயதுல்லா அலி கமேனி இணைந்தார். மேலும், பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மேற்பார்வையாளராக பொறுப்பேற்றார்.
புதிய அரசில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பெண்களின் திருமண வயது 9ஆக குறைக்கப்பட்டது. பெண்கள் நீதிபதிகளாகப் பணியாற்ற தடை விதிக்கப்பட்டது. மேற்கத்திய இசை, திரைப்படங்கள் உள்ளிட்டவை முற்றிலும் தடை செய்யப்பட்டன. கலாச்சார புரட்சி என்ற பெயரில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு, பாடத்திட்டங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டன. கசையடி, கல்லெறிதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்பட்டன.
இப்படி ஈரானில் கொண்டு வரப்பட்ட அனைத்து மாற்றங்களிலும் அயதுல்லா அலி கமேனிக்கு பெரும் பங்கு இருந்தது. புரட்சி நடைபெற்ற அடுத்த 2 ஆண்டுகளில் ஈரானின் அதிபர் பதவியை கைப்பற்றிய அவர், 1989ம் ஆண்டு அந்நாட்டின் உச்ச தலைவராக உருவெடுத்தார்.
கமேனியின் தலைமையிலான ஈரான், அறிவியல், பிராந்திய செல்வாக்கு போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றாலும், பொருளாதார ரீதியாக பெரும் சவால்களை சந்தித்தது. ஈரானின் கரன்சியான ரியாலின் மதிப்பு தொடர்ச்சியாக சரிந்தபடியே இருந்தது. வேலைவாய்பின்மையும், விலைவாசியும் அதிகரித்தது.
இருந்தபோதும், ஆயுத வலிமையை மேம்படுத்துவதிலேயே கமேனி அதிக கவனம் செலுத்தியபடி இருந்தார். லெபனான், சிரியா, ஈராக், ஏமன் போன்ற நாடுகளில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுக்களுக்கு ஏராளமான நிதியையும், ஆயுதங்களையும் அள்ளி வழங்கினார்.
அயதுல்லா அலி கமேனியின் 36 ஆண்டுகால ஆட்சியில், அவரது அரசுக்கு எதிராக பொதுமக்கள் பலமுறை வீதிக்கு வந்து போராடியுள்ளனர். 1999ம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டம், 2009ம் ஆண்டு நடைபெற்ற பசுமை இயக்க போராட்டமும் (Green Movement), 2017-18ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டமும் குறிப்பிடத்தக்கது.
2019ம் நடைபெற்ற Bloody November எனப்படும் இரத்தக் கறை படிந்த நவம்பர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2022ம் ஆண்டு ஹிஜாப் சட்டத்தை மீறியதாக கைதான மஷா அமினி உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டமும் கமேனியின் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் ஈரானில் நடைபெற்ற மாபெரும் போராட்டமும் கமேனிக்கு எதிரான மக்களின் மனநிலையை காட்டுகிறது. இந்த சூழலில்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ஈரான் மக்கள் பலர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஈரானின் “இருண்ட அத்தியாயத்தின் முடிவு” எனவும் அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஈரான் மக்களின் இந்த கொண்டாட்டங்களே போதும், கமேனி யார் என்பதையும், அவரது ஆட்சி எப்படிப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.

















