ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது இருதரப்பு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் அமைந்துள்ள மத்திய கிழக்கு நாடுகளில் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஈரானின் இந்த அத்துமீறிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கான ஈரான் தூதர் ரெசா அமேரியை வரவழைத்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், மக்கள் பயன்பாட்டு இடங்கள் மீதான ஈரானின் தாக்குதல்களை ஏற்க முடியாது என எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
மேலும், ஈரானின் தாக்குதல்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகவும், தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் காலிஃபா ஷாஹீன் அல் மரார் வலியுறுத்தினார்.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்காக ஐக்கிய அரபு அமீரக நிலப்பரப்பை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தங்கள் நிலைப்பாட்டை, ஈரானின் தாக்குதல் பாதிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் சர்வதேச சட்டங்களை மீறும் ஈரானின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், தங்கள் சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு எச்சரித்துள்ளது.
















