இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து துபாயில் இருந்து பாதுகாப்பாக தாயகம் திரும்பினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க விமானத்தில் பயணித்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து துபாயில் சிக்கினார்.
இதனால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை. இந்தநிலையில் அவர் தனது குழுவுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பினார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அசாதாரண சூழலில் இருந்து மீண்டும் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கடினமான சூழலிலும் துபாய் விமான நிலையத்தில் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.
துபாய், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்தநிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி துபாயிலிருந்து AI916D என்ற ஏர் இந்தியா விமானம் 149 பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி வந்தடைந்தது.
இதனிடையே பயணிகளை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, துபாய் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
















