ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 6 கோடிக்கும் அதிகமான முட்டைக் கோழிகளும், 2 கோடிக்கும் அதிகமான கறிக்கோழிகளும் வளர்க்கப்படுகின்றன.
முட்டைக்கான கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி நிர்ணயம் செய்து வரும் நிலையில், நாமக்கல்லில் உற்பத்தியாகும் முட்டைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாமக்கல் மண்டலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தினசரி 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், ஈரான் போர் எதிரொலியாக வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
ஹோர்முஸ் நீர் முனையை ஈரான் மூடியதால் ஆங்காங்கே கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















