நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதால் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவி ஏற்றார். அவரது பரிந்துரைப்படி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மார்ச் 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேபாள நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒரு கோடியே 89 லட்சத்து 3 ஆயிரத்து 689 பேர் வாக்களிக்க உள்ளனர். 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் சக்திவாய்ந்த சபையான கீழ் சபைக்கு 3 ஆயிரத்து 406 வேட்பாளர்களில் 165 உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க உள்ளனர்.
மீதமுள்ள 110 இடங்களுக்கு 3 ஆயிரத்து 135 வேட்பாளர்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
















