ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் நிலையில் அவற்றை தகர்க்க அதிக செலவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு அடிபணியாத ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்துள்ளது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது.
பதில் தாக்குதலுக்குப் பெரும்பாலும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களையே ஈரான் பயன்படுத்துகிறது.
இதுவரை ஈரான் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் பெரும்பாலும் ஷாகித் ட்ரோன்களே என்று கூறப் படுகிறது.
ஈரான் ஏவும் ரஷ்யாவின் தயாரிப்பான ஷாகித் ட்ரோன்களில் 90 சதவீதத்தை இடைமறித்து அழித்துவிட்டாலும் அதற்காக அமெரிக்கா கொடுத்த விலை மிக அதிகமாகும்.
வெறும் 20000 அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான ட்ரோன்களை இடைமறித்து அழிக்க 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
ஈரானிடம் ஒரு லட்சம் குறைந்த தூர வரம்பு கொண்ட ஷாகித் ட்ரோன்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. கூடுதலாக ஒரு நாளைக்கு 750 ஷாகித் ட்ரோன்களை உருவாக்கும் திறன் கொண்ட ஈரான், ஒரே நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஒரு நாளுக்கு 2,500 ட்ரோன்களை ஈரான் பயன்படுத்தினாலும், இன்னும் ஒரு மாதம் வரையில் ஈரானால் இந்தப் போரைத் தாக்குப் பிடிக்க முடியும். இங்குதான் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒரு இராணுவத் தளத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்பிலும் உள்ள ஒவ்வொரு Interceptor-யை இன்னொரு தளத்தில் இன்னொரு முறை பயன்படுத்த முடியாது.
எனவே ஈரானின் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்க இஸ்ரேல், அமெரிக்கா இருநாடுகளிடமும் போதுமான Interceptorகள் இல்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 12 நாட்கள் நடந்த ஈரான் போரில் இஸ்ரேலை பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா 150 THAAD interceptor-கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் தன் கையிருப்பில் உள்ள மொத்த THAAD interceptor-களில் 25 சதவீதத்தைப் பயன்படுத்தியுள்ளது.
தற்போதைய போரில் சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் ஈரானின் தாக்குதலைத் தடுக்க THAAD interceptor-களே பயன்படுத்தியுள்ளன.
ஒவ்வொரு interceptor விலையும் சுமார் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதோடு அவற்றை மீண்டும் உற்பத்தி செய்ய அதிக பட்சம் 8 ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
இப்போது அமெரிக்க இராணுவத்தில் interceptor-கள் மட்டும் பற்றாக்குறையில் இல்லை, கடலில் இருந்து ஏவக்கூடிய Tomahawk ஏவுகணைகள் மற்றும் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய ஆயுதங்களும் பற்றாக்குறையில் உள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
எனவே வெறும் 28000 அமெரிக்க டாலர் மதிப்புடைய மலிவான APKWS ராக்கெட்டுகளை ஈரான் ட்ரோன்களுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேலும் தான் வைத்திருக்கும் இரண்டே இரண்டு மிகவும் மலிவான Iron Beam laser யைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.
இது ஒருபுறம் என்றால் ஈரானிடம் 2000க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன என்று மதிப்பிடப் பட்டுள்ளன. அவற்றை இன்னும் ஈரான் பயன்படுத்த தொடங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எதிரியின் ஏவுகணை தடுப்பு அமைப்புகள் தீரும்வரைக்கும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பிறகு ஏவுகணைகளை ஏவ ஈரான் வியூகம் அமைத்துள்ளது.
இதற்குத் தயாராகவே, ஈரானின் ஏவுகணை ஏவு தளங்கள் அனைத்தையும் முதல் இரண்டு நாட்களிலேயே அமெரிக்காவும் இஸ்ரேலும் தரைமட்டமாக்கியுள்ளன. மேலும் ஏவுகணைகள் கிடங்கையும் அழித்துள்ளன.
இந்த நிலையில், ஈரானுடனான போர் நான்கு வாரங்களுக்கு தொடரலாம் என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளதால், ஆயுத பற்றாக்குறை போரில் அமெரிக்காவுக்குப் பெரும் சிக்கலாக மாறலாம் என்றும் கூறப்படுகிறது.
















