அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில் கடந்த 28-ம் தேதி கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே, கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி, அடுத்த உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கமேனி மறைவிற்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும், 7 நாட்கள் பொது விடுமுறை விடப்படும் என்று ஈரான் அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனிக்கு மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்று தூதரிடம் இரங்கலை தெரிவித்தார். பின்னர், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த கமேனிக்கு இரங்கல் தெரிவிக்கும் புத்தகத்தில் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டு இரங்கலை தெரிவித்தார்.
















