மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் திடீர் பதற்ற நிலை காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு, இந்திய தொழிலதிபர் ஒருவர் கைகொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மெர்டா சிட்டியைச் சேர்ந்த தீரஜ் ஜெயின், அஜ்மானில் உள்ள தனது பண்ணை வீட்டையே தற்காலிகப் புகலிடமாக மாற்றியுள்ளார். திடீரென விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும், ஹோட்டல் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டதாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த இந்தியப் பயணிகள் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் தீரஜ் ஜெயின், இந்த இக்கட்டான சூழலில் தனது பண்ணை வீட்டின் கதவுகளைத் திறந்து, சிக்கித் தவித்த இந்தியர்களுக்குத் தேவையான
உதவிகளை செய்தார். பண்ணை வீட்டிலேயே அனைவருக்கும் தரமான உணவும், தங்குவதற்கான வசதிகளையும் ஏற்படுத்தினார்.
மேலும், துபாய் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிக்கியிருந்தவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர 11 வாகனங்களை அவர் களமிறக்கினார். தற்போது சுமார் 200 இந்தியர்கள் இவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்து, மீண்டும் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கின்றனர்.
















