சீனாவுடன் செய்த தவறை இந்தியாவிடம் அமெரிக்கா செய்யாது என அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை துணை செயலாளர் கிறிஸ்டோபர் லாண்டவ் கலந்து கொண்டு உரையாடினார். அப்போது, இந்திய அரசாங்கம் தனது சொந்த மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது அவசியம் என்பதுபோல, அமெரிக்காவும் தனது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுடன் செய்த அதே தவறை அமெரிக்கா செய்யாது என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
வணிக விஷயங்களில் அமெரிக்காவை வெல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறிய அவர், அமெரிக்க மக்களுக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிவு கோட்டை நெருங்கி வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நம்பமுடியாத பொருளாதார மற்றும் மனித வளங்களைக் கொண்ட நாடு இந்தியா என கிறிஸ்டோபர் லாண்டவ் கூறினார்.
















