ஈரான்- அமெரிக்கா போரில் இலங்கையின் கடல்பகுதி அருகில் ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலை அமெரிக்கா அழித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி போர்க்கப்பலை அமெரிக்கா அழித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. முதல்நாள் போரிலேயே அந்நாட்டின் தலைமை மதகுரு மற்றும் உச்ச தலைவருமான அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்டுள்ளார்.
இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தீவிரப் படுத்தியுள்ளது.
ஈரான்- அமெரிக்கா போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் இந்திய கடற்படையின் மிலன்-2026 போர்ப்பயிற்சியில் பங்கேற்ற ஈரானின் போர்க்கப்பல் ஐஆர்ஐஎஸ் தேனா விசாகப்பட்டினத்திலிருந்து திரும்பிக் சென்றுக் கொண்டிருந்தது.
இந்த போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. இதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் (Pete Hegseth) பீட் ஹெக்சேத், இலங்கை கடற்கரைக்கு அருகில் ஐஆர்ஐஎஸ் தேனாவை, மார்க் 48 ஹெவிவெயிட் டார்பிடோ மூலம் தாக்கி அழித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் Galle துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல்மைல் தூரத்தில் இருந்த ஈரானின் போர்க் கப்பலில் இருந்து அபாய அழைப்பு வந்ததாகவும், உடனே இரண்டு கடற்படைக் கப்பல்களை அனுப்பியதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.
ஐஆர்ஐஎஸ் தேனா ஈரான் கடற்படையின் புதிய போர்க்கப்பலாகும். தென்மேற்கு ஈரானில் உள்ள மவுண்ட் தேனாவின் பெயரிடப்பட்ட இந்தப் போர்க் கப்பல் ஈரான் கடற்படையின் 86-வது பிரிவைச் சேர்ந்ததாகும்.
உலகளாவிய வர்த்தகத்தை காப்பதிலும் கடற்கொள்ளையை எதிர்கொள்வதிலும் மற்றும் நீண்ட தூர கடற்சார் திட்டங்களை நடத்துவதிலும் ஈரானின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டது. இது ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தப் போர்க் கப்பல் 1,500 டன் எடையும் 95 மீட்டர் நீளமும் கொண்டதாகும்.
ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் மற்றும் பல இலக்குகளைக் கண்காணிக்கும் திறன் கொண்ட ரேடார் அமைப்புகளும் கொண்ட இந்தப் போர்க்கப்பல், 2022-2023 ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும் 65,000 கிலோமீட்டர் கடல் பயணத்தை மேற்கொண்டு ஈரான் கடற்படையின் வலிமையை வெளிப்படுத்தியது.
நூர் அல்லது காதர் என்று அழைக்கப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 76 மில்லிமீட்டர் ஃபஜர்-27 கடற்படை துப்பாக்கி, 30 மில்லிமீட்டர் ஆயுத அமைப்பு, SEA TO AIR ஏவுகணைகள், பீரங்கிகள்,டார்பிடோ லாஞ்சர்கள் இப்போர் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு முன்னதாக இந்தப் பிப்ரவரியில் இந்திய கடற்படை சார்பில் நடந்த சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் இந்தியாவின் கடற்போர்ப் பயிற்சியான மிலன்-2026 ல் ஐஆர்ஐஎஸ் தேனா பங்கேற்றது.
மிலன்-2026 பயிற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த 85க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் பங்கேற்றன. பயிற்சி முடிந்ததும் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானின் போர்க் கப்பல் மாலுமிகளும் பணியாளர்களும் உள்ளுர் மக்களுடன் ஏராளமான செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்ததாகவும் ஷாப்பிங் மால்களுக்கும் சென்று, நினைவுப் பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த ஐஆர்ஐஎஸ் தேனாவை அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் ஏவுகணை வீசி தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 87 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியாவின் துறைமுகங்களைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட OAN சேனலில் கூறப்படும் தகவல்கள் போலியானவை என்று கூறியுள்ள இந்திய வெளியுறவுத் துறை, இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட கருத்துக்களைப் பரப்புவோரை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் இந்தியாவின் வாசலுக்கு வந்து விட்ட நிலையில் தேசப் பாதுகாப்பில் இந்தியா சுதந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டிய நேரம் இது என்று சர்வதேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
















