கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறம், கல்லூரி மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
கல்லூரி மாணவி அவரது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ், காளீஸ்வரன் மற்றும் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த தவசி ஆகிய 3 பேரை துடியலூர் அருகே துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, 8 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து, இவ்வழக்கில், சாட்சி விசாரணை மற்றும் அனைத்து தரப்பு வவாதங்களும் நிறைவடைந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
பின்னர், குற்றவாளிகள் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
















