பெரும்பாலான மக்கள் கரப்பான் பூச்சிகளை நோய் பரப்பும் அருவருப்பான பூச்சியாக கருதி அலறியடித்து ஓடுவதே வழக்கம். ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பூச்சியியல் நிபுணர் கிறிஸ்டியன் லுக்கானாஸ், கரப்பான் பூச்சியின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்துள்ளார்.
கரப்பான் பூச்சிகள் இயற்கை சுழற்சியின் முக்கிய அங்கங்கள் என்றும் மட்கும் பொருட்களை சிதைப்பதிலும், மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும் அவற்றின் பங்கு அளப்பரியது என்றும் விளக்குகிறார் லுக்கானாஸ்.
பறவைகள் மற்றும் சிலந்திகளுக்கு இவை ஒரு முதன்மை உணவு ஆதாரமாக உள்ளன. கரப்பான் பூச்சிகள் அழிந்தால் இந்த உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் குறைந்து அது உலக வெப்பமயமாதலுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கிறார்.
அணு ஆயுதப் போருக்குப் பிறகும் அழியாத உயிரினம் கரப்பான் பூச்சி என்பது முற்றிலும் பொய் என்று விளக்கம் அளித்த லுக்கானாஸ், கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன், மற்ற பூச்சிகளுக்கு இருப்பது போலவே கரப்பான் பூச்சிகளுக்கும் உள்ளதாக கூறினார்.
சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆக்கிரமிப்புகளால் பல அரிய வகை கரப்பான் பூச்சி இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக கவலை தெரிவித்துள்ள பூச்சியியல் நிபுணர் கிறிஸ்டியன் லுக்கானாஸ், தனது வாழ்நாள் முழுவதையும் இந்த விசித்திரமான பூச்சிகளின் இனங்களை ஆவணப்படுத்துவதற்கே அர்ப்பணிக்கப் போவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்…
















