லெபனானின் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக விளங்கிய பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய ‘பேய் நகரமாக’ மாறியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலிய ராணுவம் பெய்ரூட் பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, சுமார் 5 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான மக்கள் ஒரே இரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் இருக்கும் வீதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் இடிந்து விழுந்த கட்டிடங்களும், தூரத்தில் கேட்கும் குண்டுவெடிப்புச் சத்தங்களுமே எஞ்சியுள்ளன.
இது ஒருபுறம் இருக்க பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் லெபனான் பிரிவைச் சேர்ந்த ஐந்து முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
















