வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முனையில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 60 ரூபாயும், வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த 150 ரூபாய் தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், சிலிண்டர் ஒன்றுக்கு 265 ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் நிலவி வரும் வணிக ரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் ஹோட்டல்கள், உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
















