ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் தற்போது 11-வது நாளை கடந்துள்ளது. ஷியா மத குருக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஈரான், தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ‘காமிகாஸ்’ ட்ரோன்கள் இன்னும் குறையவில்லை என்பதை காட்டும் வகையில், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தொடர்ந்து தாக்கி வருகிறது.
ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) நடத்தி வரும் இந்த தாக்குதல்கள் அதிக துல்லியத்துடன், அடிக்கடி நிகழ்வதை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் கவலைக்குரிய நிலைமையாக பார்க்கின்றனர்.
சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள குறைந்த செலவிலான ட்ரோன்களை பயன்படுத்தி, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள எதிர்ப்பு ஏவுகணைகளை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை ஈரான் உருவாக்கியுள்ளது.
இதனால் இந்த போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாகவும் பெரும் அழுத்தம் உருவாகியுள்ளது. இதனால் ஈரான் முன்கூட்டியே பெரும் அளவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஷாஹெட்-136 போன்ற ட்ரோன்களை குவித்து வைத்திருந்தது என்பதும் இந்த போரில் தெளிவாகியுள்ளது.
தொலை தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்த போர் “நேரடி மோதல் இல்லாத போர்” என்ற புதிய போர் முறையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த போரில் மனித உளவுத் தகவல்களின் அடிப்படையில் இலக்குகள் தேர்வு செய்யப்பட்டு, வெகு தூரத்திலிருந்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இந்த போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை வெளி காட்டுவதோடு, தற்காப்பு ஆயுத உற்பத்தியில் தன்னிறைவு எவ்வளவு முக்கியம் என்பதையும் உலக நாடுகளுக்கு நினைவூட்டியுள்ளது.
அத்துடன் ஈரானுக்கு சர்வதேச தடைகள் இருந்தபோதிலும், சீனா மற்றும் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை மாற்றியமைத்து, நீண்ட தூர ஆயுதங்களை அந்நாடு உருவாக்கியிருப்பது இந்த போரில் குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை மட்டும் குறிவைக்காமல், சன்னி வளைகுடா நாடுகளையும் இந்த மோதலுக்குள் இழுத்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்க ஈரான் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஹார்மஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இத்தகைய அழுத்தம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பின்வாங்க வேண்டிய நிலை உருவாகும் என்ற கணிப்பும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரிகத்தை கொண்ட பாரசீக மரபின் வாரிசாக இருக்கும் ஈரான், 1979 இஸ்லாமியப் புரட்சியிலிருந்து மத அடிப்படையிலான ஆட்சியில் உள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக பாலஸ்தீனப் பிரச்னையை மையமாக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மனநிலையை ஈரான் உருவாக்கியுள்ளது.
இதனால், இந்த சூழ்நிலையில் ஈரான் மக்களிடையே அரசுக்கு எதிரான கிளர்ச்சியை உருவாகச் செய்வது அமெரிக்காவுக்கு கடினமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தரை படைகளை பயன்படுத்தாமல் ஈரானில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தும் டிரம்ப் அரசின் நோக்கம், தற்போதைய சூழ்நிலையில் எளிதானதாக இருக்காது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆகையால், மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து உலக நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.
















