ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள மாதவ் சிருஷ்டி வளாகத்தில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா திட்டங்கள், சமூக சவால்கள் மற்றும் நிறுவன விரிவாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும் “அகில பாரதிய பிரதிநிதி சபா” கூட்டம் மார்ச் 13 முதல் 15ஆம் தேதி வரை இந்தூரில் நடைபெறவுள்ளதாகக் கூறினார்.
3 நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்தும் ஆயிரத்து 487 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் முன்னிலையில் நாளை கூட்டம் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, 10 கோடிக்கும் மேற்பட்டோரிடம் மத்திய, மாநில அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்துள்ளதாகவும், வரும் நாட்களில் மீதமுள்ள பிராந்தியங்களிலும் பிரச்சாரம் தொடரும் எனவும் தெரிவித்தார்.
சமூக சீர்திருத்தவாதி சந்த் சிரோமணி ரவிதாஸின் பிறந்தநாள் தொடர்பான நிகழ்ச்சிகள், சமூக நல்லிணக்கம், சமகால சமூகப் பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்தாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் தளங்கள் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நூற்றாண்டு விழாவையொட்டி நாடு முழுவதும் 97 பயிற்சி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளரன் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
















