ஆட்டோவில் இந்தியாவை சுற்றி வரும் பிரிட்டிஷ் தம்பதி இதுவரை 17 மாநிலங்களுக்கு பயணித்த நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஆடம் – ஜென்னி என்ற தம்பதி 10 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தனர். தற்போது இந்த தம்பதி ஆட்டோவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணித்து வருகின்றனர்.
இதுவரை 17 மாநிலங்களை கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களில் இந்த தம்பதி பயணித்துள்ளனர். இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் கலாச்சாரம் மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவறறை நேரடியாக அனுபவிக்கும் நோக்கில் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
சொகுசு கார்கள் அல்லது விமானங்களில் பயணிப்பதை விட, ஆட்டோவில் பயணிப்பது தங்களுக்கு இந்திய மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சாலைகளும், டிராபிக்கும் முதலில் தங்களுக்குச் சவாலாக இருந்ததாக குறிப்பிட்டுள்ள அந்த தம்பதி, மக்கள் காட்டும் அன்பு தங்களை நெகிழ வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
வழியில் எங்குச் சென்றாலும் மக்கள் தங்களை வரவேற்று, உணவு அளித்து உதவி செய்கிறார்கள் என்றும் தங்கள் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
















