ஹிமாச்சலில் வயலுக்கு சென்றபோது திடீரென தாக்கிய சிறுத்தையை வெறும் கையால் இளைஞர் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள சார்லி கிராமத்தை சேர்ந்த 18 வயதான இளைஞர் பர்வேஷ் சர்மா. ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற் பயிற்சி மையத்தில் படித்து வரும் பர்வேஷ் சர்மா, தன் வயலுக்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென தாக்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பர்வேஷ் சர்மா, சமயோசிதமாக செயல்பட்டு சிறுத்தையின் தாடையை பிடித்து போராடினார்.
பின் சிறுத்தையின் தலை மற்றும் கழுத்தை அடித்து தாக்கி 12 நிமிட போராட்டத்துக்கு பின் கொன்றார். சிறுத்தையுடன் நடந்த போராட்டத்தில் பர்வேசுக்கு உடலில் காயம் ஏற்பட்டது.
சம்பவம் பற்றி அறிந்து வந்த வனத்துறை டிவிஷனல் அதிகாரி ராஜ்குமார் சர்மா, இளைஞருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கினார்.
கடந்த 6ம் தேதி முதல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அதை பிடிக்க கூண்டு வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காததால், மனித – விலங்கு மோதல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினர். இந்நிலையில் சிறுத்தையை பர்வேஷ் அடித்து கொன்றதால் கிராம மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
















