ஈரான் போரில் மையப் புள்ளியாக மாறியுள்ள ஹார்மோஸ் ஜலசந்தியில் கடற்படை கண்ணிவெடிகளை பதித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஈரானின் 16 கடற்படை கண்ணிவெடிக் கப்பல்களை அமெரிக்கா அழித்துள்ள நிலையில் இது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்திவருகிறது.
போர் விரைவில் முடியும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தாலும், ஹார்மோஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் இடையூறு ஏற்படுத்தினால், முன்னை விட 20 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஹார்மோஸ் ஜல சந்தியில் கடற்படை கண்ணிவெடிகளை ஈரான் நிலைநிறுத்தத் தயாராகி வருவதற்கான அறிகுறிகளை அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. ஏற்கெனவே குறைந்த அளவிலான கடற்படை கண்ணி வெடிகளை ஈரான் பதித்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதற்காக இரண்டு முதல் மூன்று கடற்படை கண்ணிவெடிகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட சிறிய படகுகளை ஈரான் பயன்படுத்துவதாகவும் இந்த நடவடிக்கையில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஈடுபடுவதாகவும் நம்பப்படுகிறது,
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படைகண்ணி வெடிகள் மட்டுமின்றி சீனா மற்றும் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட சுமார் 2,000 முதல் 6,000 கடற்படை கண்ணிவெடிகளை ஈரான் வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்தால் கைவசம் இருக்கும் அனைத்து கடற்படைகண்ணி வெடிகளையும் ஹார்மோஸ் ஜலசந்தியில் ஈரான் பதிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஹார்மோஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படலாம் என்று ஈரான் எச்சரித்திருந்த நிலையில் அந்த ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்துக்குப் பயன்படும் வெறும் 100 மைல் நீளமும் 21 மைல் அகலமும் கொண்ட மிகக்குறுகிய பாதை தான் ஹார்மோஸ் ஜலசந்தி. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்த கடல் பாதையையே நம்பியுள்ளன. கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு முழுமையாக ஹார்மோஸ் ஜலசந்தியையே பயன்படுத்துகிறது.
முன்னதாக மார்ச் 1-ம் தேதி 28 லட்சம் பேரல் எண்ணெயைச் சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மட்டுமே இவ்வழியாக சென்றன. இது 2026-ன் தினசரி சராசரியான 1.98 கோடி பேரல்களில் இருந்து 86 சதவீத சரிவாகும். அதற்கு அடுத்தநாள் ஒரு சிறிய டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டுமே சென்றன.
இந்தக் கடல் பாதையை அடைத்துவிட்டால் ஒட்டுமொத்த உலகமும் இருளில் மூழ்கும் என்பதுதான் ஈரானின் கணக்கு. இதற்காகவே கடற்படை கண்ணிவெடிகளை ஈரான் கையில் எடுத்துள்ளது.
யேலில் படித்த டேவிட் புஷ்னெல் என்பவர்தான் முதன்முதலில் நீருக்கடியில் வெடிமருந்தை வெடிக்கச் செய்யும் அறிவியலைக் கண்டுபிடித்தார்.
இரண்டாம் உலகப் போரில் 15 அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளால் அழிக்கப்பட்டுள்ளன. அனைத்து வகை போர்த் தாக்குதல்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக கடற்படைக் கப்பல்களை இந்த கடற்படை கண்ணிவெடிகள் கடுமையாக தாக்கி அழித்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போரிலும் கடற்படை கண்ணிவெடிகள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் வீசிய நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளால் கருங்கடல் நிரம்பியுள்ளது.
கடலுக்கு அடியில் 60 மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும் இந்தக் கடற்படை கண்ணி வெடிகள் மேலே செல்லும் பெரிய எண்ணெய் கப்பலின் காந்த விசை அழுத்தத்தை உணர்ந்து தானாகவே வெடித்துக் கப்பலை அழிக்கும்.
கடல் பாதையில் பதிக்கப்பட்ட இந்தக் கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அகற்றுவது வைக்கோல் போரில் குண்டூசியைத் தேடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
ஈரான் பதித்த கடற்படை கண்ணி வெடிகளை அமெரிக்க கடற்படை அகற்றிவிட்டாலும் உடனே ஈரான் மீண்டும் புதிய கடற்படை கண்ணிவெடிகளை வைத்துவிடும் என்றும் அஞ்சப் படுகிறது.
ஈரானின் 10 க்கும் மேற்பட்ட கடற்படை கண்ணிவெடி வைக்கும் படகுகளை அமெரிக்க இராணுவம் தாக்கி அழித்துள்ளன. இது குறித்த வீடியோவையும் அமெரிக்க மத்திய கட்டளை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உடனடியாகக் கடற்படை கண்ணிவெடிகளை ஈரான் அகற்ற வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
















