ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கைதான 15 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவின் புறநகர் பகுதியான கிராஸ்னோகோர்ஸில் ‘குரோகஸ் சிட்டி ஹால்’ என்ற அரங்கம் உள்ளது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி ‘பிக்னிக்’ என்ற ராக் இசைக் குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு ஏற்பட்டிருந்தது. அரங்கத்தின் 7,500 இருக்கைகளும் ரசிகர்களால் நிரம்பி இருந்தன.
இசைக் கச்சேரி தொடங்க இருந்த நிலையில் திடீரென 4 தீவிரவாதிகள் தானியங்கி துப்பாக்கிகளுடன் அரங்கத்துக்குள் நுழைந்து நாலாபுறமும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். எளிதில் தீப்பிடித்து எரியக்கூடிய ரசாயனத்தை அரங்கம் முழுவதும் தெளித்தனர். இதன் காரணமாக அரங்கம் தீ பற்றி எரிந்தது.
தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலில் 143 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு ரஷ்ய பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்.
இச்சம்பத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலுக்குத் திட்டமிட்டது, ஆயுதங்கள் வழங்கியது மற்றும் உதவி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ரஷ்ய நீதிமன்றம் கைதான 15 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
















