தேன் கூட்டில் கைவைத்ததாக ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் போர் தொடுத்ததன் விளைவாக உலக எண்ணெய் எரிபொருள் வர்த்தகம் சீர்குலைத்துள்ளது. ஈரானின் தாக்குதலில் அமெரிக்க எண்ணெய் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவைப் பழிவாங்கும் ஒரே நோக்கத்துடன் இருக்கும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படை அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமல்லாமல் வளைகுடா மற்றும் பாரசீக கடல் பரப்பில் உள்ள எண்ணெய் கப்பல்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூட்டிவிட்ட ஈரான், எண்ணெய் வணிகக் கப்பல்களை நீருக்கடியில் இருந்து ஏவும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கிறது.
சமீபத்தில் பாரசீக வளைகுடாவில் ஈராக் கடல் எல்லையில் மால்டா நாட்டு கொடியுடன் ‘செஃபைரோஸ்’, மற்றும் மார்ஷல் தீவுகள் கொடியுடன் ‘சேஃப்சீயா விஷ்ணு’ என்ற இரண்டு எண்ணெய் கப்பல்கள் சென்று கொண்டிருந்தன.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் வந்த சஃபேசியா விஷ்ணு, அமெரிக்காவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலாகும். ஈராக்கின் பாஸ்ரா அருகே தண்ணீருக்குள் இருந்து சீறிவந்த வெடிமருந்துகளுடன் கூடிய ட்ரோன் இக்கப்பலைத் தாக்கி அழித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றுள்ளது.
இன்னமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் எண்ணெய் கப்பலில் இருந்த மாலுமிகள் உட்பட 15 இந்தியர்கள் பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், ஒரு இந்திய மாலுமி துரதிர்ஷ்டவசமாக பலியாகியுள்ளார். இந்தச் செய்தியை ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் கப்பல்களைத் தாக்குவதற்கு Autonomous underwater vehicle எனப்படும் நீருக்கடியில் இருந்து தாக்கும் ஆளில்லா ட்ரோன்கள் பயன்படுத்துகிறது.
டார்பிடோவைப் போல வெடிமருந்துகளுடன் சென்று இலக்கை மோதி வெடிக்கும் வகையில் இந்த ட்ரோன்களை ஈரான் வடிவமைத்துள்ளது. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதைகளில் செல்லும் இந்த ட்ரோன்கள் AI-யாலும் இயக்கப் படுகின்றன. தொலைதூரத்தில் இருந்தும் இந்த ஆளில்லா ட்ரோன்களை இயக்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.
ஹவூதி தீவிரவாதிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கடியில் செல்லும் நாசிர்-5 ட்ரோன்கள் போன்ற பல ட்ரோன்களை ஈரான் உருவாக்கியுள்ளது.
ஈரான் கடல் எல்லைக்குள் வரும் அமெரிக்க, ஐரோப்பிய கப்பல்களைக் குறிவைத்து அழிக்கும் ஈரானின் தாக்குதல், போரை வேறு களத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.
மேற்காசியா முழுவதும் போர் ஏற்பட்டுள்ள நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே வரும் எந்தக் கப்பலையும் இனி நீருக்கடியில் செல்லும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்கும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
















