ஈரான் போரில் AI பயன்படுத்தியதை அமெரிக்க ராணுவம் ஒப்புக்கொண்ட நிலையில், டெர்மினேட்டர் படத்தை சுட்டிக்காட்டி சீனா எச்சரித்துள்ளது.
ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய ஏஐ கருவிகள் உதவுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஏஐ மூலம் சில நொடிகளில் தரவு ஆய்வுகளை முடிப்பது எதிரியை விட வேகமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது என கூறியுள்ளார். ஈரானில் பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஏஐ காலாவதியான தகவலை வழங்கியது காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து சீனா எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின், மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும் என தெரிவித்தார். இந்த நிலை தொடர்ந்தால், டெர்மினேட்டர் திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
















