கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த இரண்டு பேர், கஞ்சா போதையில் இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழஞ்சநல்லூரை சேர்ந்த திலீப்குமார் என்பவர் தனது மனைவியை மகப்பேறு சிகிச்சைக்காக காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். இதே போல அபினேஷ் என்பவரும் தனது மனைவியை மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.
இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில், அபினேஷ் தனது குழந்தையை பார்க்க மது போதையில் வந்ததோடு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதனைக்கண்ட திலீப்குமார் அவரை அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது, இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அபினேஷ் தனது நண்பரை வரவழைத்து திலீப்குமாரை வெட்டிக் கொலை செய்ய முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், திலீப்குமாரை பாதுகாப்பாக அறையில் வைத்து பூட்டியதோடு போலீசாருக்கு தகவலளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
















