சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாகனங்களின் நடமாட்டத்தை துல்லியமாக கண்காணிக்கவும், பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் 3 குழுக்கள் வீதம் மொத்தம் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 60 வாகனங்கள் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

















