தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பாக கருதப்படும் ஜவுளித்துறை, கடந்த சில ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் வருடாந்திர தொழில்துறை ஆய்வறிக்கையின் படி, 2021-22 முதல் 2023-24 வரையிலான குறுகிய காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் 2 ஆயிரத்து 121 ஆக இருந்த ஜவுளி ஆலைகளின் எண்ணிக்கை, தற்போது ஆயிரத்து 672 ஆக குறைந்துள்ளது. அதேபோல, ஜவுளி மற்றும் ஆடை உற்பத்தி சார்ந்த 11 ஆயிரத்து 460 நிறுவனங்களில், 8 ஆயிரத்து 503 நிறுவனங்கள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. அத்துடன் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சம் விசைத்தறி ஆலைகள் முடங்கியிருப்பது, ஜவுளி உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் தீவிர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீழ்ச்சிக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 9 ரூபாய் 25 காசுகளாக இருப்பதால், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உற்பத்திச் செலவு அதிகரிப்பதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக, தமிழக ஜவுளித் துறையின் போட்டித்திறன் குறைந்து வருவதாக சுட்டிக்காட்டும் அவர்கள், இதனால் பல சிறு மற்றும் குறு மில் உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், என்.டி.சி மில்கள் இயங்கிய காலத்தில் பஞ்சு விலை கட்டுக்குள் இருந்ததாக கூறும் தொழில் துறையினர், தற்போது சில சிண்டிகேட் அமைப்புகள் விலையை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சூழலில் தொழிலாளர் பற்றாக்குறை, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு, ‘பூஜ்ஜிய திரவக் கழிவு’ விதிமுறைகளால் ஏற்படும் கூடுதல் சுத்திகரிப்பு செலவுகள் ஆகியவை ஜவுளித் தொழிலின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன. இதன் காரணமாக ஜவுளித்துறை மட்டுமின்றி அதனை சார்ந்துள்ள விவசாயிகளும் பாதிக்கப்படுவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டு வரும் ஜவுளி துறையை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, மின் கட்டணத்தில் சலுகை வழங்குதல், மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துதல் மற்றும் தொழிலுக்கு ஆதரவான ஊக்கத் திட்டங்களை அறிவித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
















