ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும், ஆட்சியின் செயல் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை ஈரான் உறுதிப் படுத்தியுள்ள நிலையில், அலி லாரிஜானி கொல்லப்பட்டிருப்பது போர் நிறுத்த பேச்சு வார்த்தைகளுக்கான வாய்ப்பை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் 3-ஆவது வாரமாகத் தொடர்கிறது. அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தின் முக்கியத் தலைவா்களைக் கொல்வதற்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.இதைத் தொடா்ந்து டெஹ்ரானில் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கொல்லப்பட்ட பிறகு, அந்நாட்டின் செயல் தலைவராக நாட்டின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை முன்னின்று நடத்திய அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். தமது மகள் வீட்டில் தங்கியிருந்தபோது அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் (Basij) பசிஜ் துணை ராணுவப் படையின் தளபதி குலாம்ரெசா சுலைமானியும் 10-க்கும் மேற்பட்ட உயர்மட்ட அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
அலி லாரிஜானி, தெஹ்ரானுக்கு அருகிலுள்ள தனது மகளின் வீட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில், தனது மகன் மொர்டேஸா லாரிஜானி, பாதுகாவலர் அலிரேஸா பாயத் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் கொல்லப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் என்ற அதிபர் ட்ரம்பின் கோரிக்கைகளை நிராகரித்த வந்த அலி லாரிஜானி, கடந்த மார்ச் 13 ஆம் தேதி தெஹ்ரானில் நடந்த குட்ஸ் தினப் பேரணியில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை நியாயப்படுத்திய லாரிஜானி, 2020-ல் இஸ்ரேலுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து, அலி லாரிஜானி உட்பட இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையைச் சேர்ந்த 10 தளபதிகளின் பட்டியலை வெளியிட்ட அமெரிக்க அரசு அந்த நபர்கள் பற்றிய தகவல்களுக்கு 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தான் இஸ்ரேலில் வான்வழி தாக்குதலில் அயத்துல்லா அலி கொமேனியின் மறைவுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரான் போரை முன்னின்று வழிநடத்திய அலி லாரிஜானியை இஸ்ரேல் இராணுவம் கொன்றுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் உலக எண்ணெய் சந்தை கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எண்ணெய், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் பெரிதும் தடைபட்டுள்ளதால் எண்ணெய் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில் அலி லாரிஜானியின் மரணம் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தடைபடும் என்று கூறப்படுகிறது.
அயத்துல்லா தொடங்கிவைத்த ஈரானின் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி முழுமையாக அகற்றப்படும் வரை இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாகத் தாக்குதல்கள் நடத்தும் என்றும், ஒரு அயதுல்லா ஆட்சி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக மற்றொரு அயதுல்லா ஆட்சி அமைவதை இஸ்ரேல் அனுமதிக்காது என்றும் உறுதியாக தெரிவித்துள்ளது.
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒரு அரசியல் தீர்வை முன்னெடுக்கக்கூடிய நபர்களைக் குறிவைத்து தாக்குவதில் இஸ்ரேல் முனைப்புக் காட்டுவதாக ஐரோப்பிய வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளரும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கத் திட்டத்தின் துணை இயக்குநருமான எல்லி ஜெரன்மாயே தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்ட போது அதிபராக இருந்த மதகுரு ஹசன் ரூஹானி மற்றும் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடனும் நேரடித் தொடர்பு கொண்டிருந்த ஒரே நபர் லாரிஜானி மட்டுமே.
தேசிய பாதுகாப்பு விவகாரங்களை நிர்வகிப்பதிலும், வெளிநாட்டுத் தூதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் திறமை மிக்க லாரிஜானி, நெருக்கடியான காலங்களில் பிற நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு ஈரானின் நம்பிக்கைக்குரிய தலைவராகவே இருந்து வந்துள்ளார்.
அலி லாரிஜானிக்குப் பதிலாக ஈரான் காவல்துறையின் முன்னாள் தளபதியும் இஸ்லாமியப் புரட்சிகரப் காவல் படையின் முன்னாள் தளபதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான (Qalibaf) காலிபாஃப்புக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கபடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தெஹ்ரானின் முன்னாள் மேயராக விளங்கிய காலிபாஃப் தான், மொஜ்தாபா கொமேனியை உச்சத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் லாரி ஜானியின் படுகொலை ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அனைத்து சாத்தியமான கதவுகளையும் அடைத்துள்ளது.
















